நாகர்கோவில், ஜூலை 7 –
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 – ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் 31-07-2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
ஐ.டி.ஐ-யில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ / பட்டப் படிப்பு தேர்ச்சி / தோல்வி மற்றும் இடைநின்றோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் அட்வான்ஸ்டு சி என் சி மெஷினிஸ் டெக்னீஷியன், இன்டஸ்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங், மற்றும் மெக்கானிக் எலக்ட்ரானிக் வெகிக்கிள் ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. மேலும் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதவருக்காக சிறப்பு தொழிற்பிரிவு உள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 04652- 261463, 9499055806, 9499055805. அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ஐடிஐ -ல் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



