நாகர்கோவில், ஜூன் 23 –
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ஆயுள் காப்பீடு தவணைத் தொகையை செலுத்த மேம்படுத்தப்பட்ட புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி (Postal Life Insurance) மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி (Rural Postal Life Insurance) சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் தவணைத் தொகையை அஞ்சலகம் சென்று செலுத்தத் தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன் தான் புதுப்பிக்க இயலும். எனவே பின்வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை தொடர்ந்து எளிதாக செலுத்திக் கொள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகள்
- ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டல், https:// pli.indiapost.gov.in என்ற வலை முகவரி மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை பதிவு செய்து PLI/ RPLI டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
- IPPB மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இதில் PLI/ RPLI பிரீமியத்துடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள IPPB பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
- NACH வசதி மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 7, 12 அல்லது 17 ஆம் தேதிகளில் நேரடியாக டிஜிட்டல் முறையில் PLI/ RPLI பிரீமியத்தை செலுத்த முடியும்.
- தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு (POSB) மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் POSB கணக்கிலிருந்து PLI/ RPLI பிரீமியத்தை செலுத்த Standing Instruction (SI) வழங்கலாம். வாடிக்கையாளர்கள் POSB Internet banking மற்றும் mobile banking வசதிகளைப் பயன்படுத்தியும் தங்கள் பிரீமியத்தைச் செலுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார்.