நாகர்கோவில், ஜூலை 30 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின் கலெக்டர் கூறியதாவது: சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாதாந்தோறும் கன்னியாகுமரி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஜூலை மாதம் வாகன விபத்துக்களால் ஏற்பட்ட இறப்புகள் குறித்து ஆராய்ந்தபோது குறிப்பாக மதுபோதை மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும், ஹெல்மெட் அணியாததாலும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
விபத்து பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, வட்டார போக்குவரத்துறை மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள், விழிப்புணர்வு பலகைகள், வேக கட்டுப்பாடு பலகைகள் மற்றும் சாலையோர போக்குவரத்து சின்னங்கள் வைத்திடவும் சாலைகளில் தேவையான வெள்ளை நிற கோடுகள் மற்றும் மஞ்சள் நிற மையக்கோடுகள், வெள்ளை வேகக்கட்டுபாடு கோடுகள் அமைத்தல், சாலைகளின் நடுவில் தேவையான மையத்தடுப்பான்கள் ஏற்படுத்துதல், மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் ஒளிரும் பட்டைகள் அமைத்தல் போன்ற சாலை பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொண்டு தொடர்ச்சியாக கண்காணித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனை பெற்றோர் கண்காணித்திட வேண்டும். தவறினால் பெற்றோர் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தில்லா குமரி மாவட்டம் உருவாக்கிட பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலுமாகத் தடுப்பதற்கும், விபத்து ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்துவதற்கும் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.காளீஸ்வரி, துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



