குளச்சல், மே 11 –
கரையாகுளத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் கரையாகுளம் உள்ளது. இந்த குளம் 26.88 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சுமார் 25 அடி ஆழமானது. மழைக்காலங்களில் அருகில் உள்ள பாம்பூரி வாய்க்காலில் இருந்து மறுகால் பாயும் வெள்ளம் புற ஓடை வழியாக இதில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த வெள்ளத்தை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
தவிர இந்த குளத்தின் கரையில் பேரூராட்சி யின் 3 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இதன் மூலம் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் குளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது. இதற்கிடையே இந்த குளத்தின் வட கிழக்கு கரையில் வளர்ந்து நின்ற மரம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெய்த மழையில் சாய்ந்து குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
அடுத்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கினால் குளம் முழுவதும் நிரம்பி விடும். மரத்தின் கிளைகள் படித்துறையை நோக்கி நீண்டுள்ளது. மழையில் மரம் முழுவதும் மூழ்கினால் மரம் குளத்தில் மூழ்கி கிடப்பது தெரியாது. சிறுவர்கள் குளத்தில் குதித்து நீச்சலடித்து குளிக்கும்போது ஆபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தென் மேற்கு பருவமழைக்கு முன்பு குளத்தில் கிடக்கும் மரத்தை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் மரைத்தை ஏலமிட வேண்டும் அல்லது மரத்தை கரையேற்றி போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



