கருங்கல், ஜூலை 13 –
புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலம் சேரும் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவர் தனது சொகுசு காரில் நண்பர்களுடன் மேல்மிடாலம் கடற்கரைக்கு சென்றார். அப்போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக கடற்கரை மணலில் காரை அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரம் கடல் ஈர மணலில் ஆழமாக புதைந்தது. இதையடுத்து இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் காரை வெளியே எடுக்க முடியவில்லை.
இளைஞர்களின் ஆபத்தான சாகசத்தை கண்டு அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கார் மணலில் சிக்கியதை பார்த்தும் அவர்களுக்கு உதவ முன் வராமல் சென்றனர். இதற்கு இடையே கடல் அலையின் வேகம் அதிகரித்ததால் பெரிய கயிறு கொண்டு கரையில் தூண் போன்ற பகுதியில் கட்டினர்.
பின்னர் பொதுமக்கள் யாரும் உதவாத காரணத்தால் இளைஞர்கள் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து கடல் மணலை அப்புறப்படுத்தி புதைந்திருந்த சக்கரத்தை வெளியில் எடுத்து காரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு மற்றும் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



