கன்னியாகுமரி, நவ. 24 –
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி அய்யா வைகுண்டசாமி விஞ்சைபெற்ற இடமாகும். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.
கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்குமற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தர்மகர்த்தா அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி அன்னதர்மம் போன்றவை நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியல் குவியத் தொடங்கினர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.



