போகலூர், ஆக. 14 –
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளர் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் சைலேந்திரபாபு மாணவ மாணவிகள் இடையே மாபெரும் தமிழ் கனவு குறித்த கருத்துரை வழங்கி பேசுகையில்: மாபெரும் தமிழ் கனவின் நோக்கம் எல்லோரும் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அந்த வகையில் நமது முன்னோர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததால் அவர்களின் லட்சியங்களை நிறைவேறாத நிலையில் இருந்தன. பொதுவாக ஒரு மனிதனின் லட்சியம் நிறைவேறுவது என்பது மூன்று வகையில் சரியான நிலைப்பாடுகள் இருந்தால் அங்கு லட்சியம் என்பது நிறைவேறும். அதற்கு முதலில் ஒவ்வொருவருக்கும் சரியான உணவு, சரியான கல்வி, போதிய வேலை வாய்ப்பு இந்த மூன்றும் மிக முக்கியம். இது முன்னோர்கள் காலத்தில் சரியாக இல்லாத நிலைப்பாட்டால் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. ஆனால் தற்போது இம்மூன்றும் சரியான நிலையில் சரியான காலகட்டத்தில் வழங்கப்படுவதால் பொருளாதார நிலை மிக முன்னேற்றம் கண்டுள்ளது.
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும் சமூக விழிப்புணர்வையும் பொருளாதாரம் முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இணைய கல்வி கழகம் தமிழ் கனவு என்னும் இந்த பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி 2022 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 200 கல்லூரிகளுக்கு மேல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
இன்றைய மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே கல்லூரிகளில் தமிழர் மரபு நாகரிகமும் சமூக நீதி பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி குறித்த கையேடும் தமிழ் பெருமிதம் குறித்த கையேடு வழங்கப்படுகிறது. இதில் உள்ள கருத்துக்களை மாணவ மாணவிகள் நன்கு தெரிந்து ஒவ்வொருவருக்கிடையே கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு இன்றைய இளைய தலைமுறையினர் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
கல்வி என்பது ஒரு சிறந்த ஆயுதம். இன்றைய இளம் தலைமுறைக்கு கல்வி கற்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. ஒவ்வொருவரும் ஆற்றல் உள்ள மனிதனாக வாழ கல்விப் பருவம் மிக இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய தினத்திலிருந்து 21 நாட்கள் உங்கள் செயல்பாட்டின் நிலையை மாற்றுங்கள். அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படிப்பு, ஒரு மணி நேரம் எழுதுதல், ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தல் என மனநிலைக்கு மாறினால் உங்களிடமிருந்து இன்றைய கனவு நினைவாக மாறும் நிலை உருவாகும்.
அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவின் உயர்கல்வி பெறுபவரின் எண்ணிக்கை 22 சதவீதம். அதே நேரம் மாநில அளவில் ஒப்பிடுகையில் இங்கு மகளிர் மட்டும் 54 சதவீதம் உயர்கல்வி பெறுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு தமிழகத்தில் சிறந்த பொருளாதாரம் முன்னோக்கி செல்கின்றன. அதிலும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் வழங்கியதன் மூலமும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பயனுள்ள திட்டமாகும். இவ்வாறு அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்த வழிவகை செய்யும் வகையில் தமிழ் கனவு என்னும் இலக்கு தொடர்ந்து பயணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொருவரும் இன்றைய காலகட்டத்தில் அரசு வழங்கும் திட்டங்களையும் அறிவுரைகளையும் பெற்று பொருளாதார முன்னேற்றத்தோடு வாழ்ந்திட வேண்டுமென முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் சைலேந்திர பாபு கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பாக வினாக்கள் கேட்டு விவரங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பாராட்டி சான்றுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



