குளச்சல், ஜன.17-
மணவாளக்குறிச்சி அருகே திருநயினார் குறிச்சியை சேர்ந்தவர் சச்சிதானந்தன் மகன் கார்த்திகேயன் (25). காங்கிரீட் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை தனது தாயார் சைலஜாவிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 8:30 மணி அளவில் சைலஜா கார்த்திகேயனுக்கு போன் செய்த போது சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் இரவு 10:00 மணி வரை கார்த்திகேயன் வீட்டிற்கு வரவில்லை.
இதை அடுத்து மணவாளக்குறிச்சி போலீசில் தாயார் சைலஜா புகார் அளித்தார். போலீசார் கார்த்திகேயனை தேடி வந்த நிலையில், திருநயினார்குறிச்சியிலிருந்து வெள்ளிச்சந்தை போகும் வழியில் உள்ள ஒரு குளத்தில் கார்த்திகேயன் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மணவாளகுறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகேயன் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கார்த்திகேயன் குளத்தில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது தாக்கி குளத்தில் தள்ளியதில் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


