தருமபுரி, ஆகஸ்ட் 28:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி, ஏலகிரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஏலகிரியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமின் மூலம் தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களை இணையதளம் மற்றும் கிராமப்புற அரசு அலுவலகங்கள் மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.
பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதன் மூலம் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள், விளக்கக் கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ ஜார்ஜ், அரசு அலுவலர்கள் ஷெர்லி ஏஞ்சலா, கோவிந்தன், பழனிசாமி, மீனாட்சி சுந்தரம், முருகலட்சுமி, சந்திரா, நல்லம்பள்ளி வட்டாட்சியர் கற்பகவடிவு உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



