மார்த்தாண்டம், ஜூன் 19 –
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாள் முன்பாகவே தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த நீர் உற்றுகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோதையாறு, பரளியாறு, பழையாறு போன்றவற்றில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. முக்கிய அணையான பேச்சிப்பாறை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் பாசனத்திற்காக தினமும் தண்ணீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 45.56 அடியை எட்டியது. அணைக்கு 1233 கன அடி நீர்வரத்து இருந்தது. விரைவாகக் கொள்ளளவு எட்டும் நிலையில் இருப்பதால் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மறுகால் ஷெட்டர் வழியாக 526 கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கால்வாய் வழியாக 503 கன அடி பாசன நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிக அளவில் செல்லுகிறது. எனவே கோதையாறு பாய்ந்து செல்லும் திற்பரப்பு, திருவரம்பு, திருவட்டாறு, குழித்துறை, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் குளிக்கவோ கரையோரம் நின்று பார்க்கவோ செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.