நாகர்கோவில், மே 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அணையின் மதகுகளின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவு 48 அடியாகும். தற்போது 22.03 அடி அளவு நீர் நிரம்பியுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து, நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து மழை பொழியும் போது நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படின் அணையின் மதகு பாதுகாப்பு தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அணையின் நீர் வரத்து அளவினை அவ்வப்போது கண்காணித்திட நீர்வளத்துறை அலுவலர்கள், பணியளார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார். அவருடன் நீர்வளத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



