நாகர்கோவில், செப். 22 –
பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்தில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் மேன்மையடைந்துள்ளதால் தோவாளை வட்டாரத்திலுள்ள பெண்கள் குறிப்பாக பழங்குடியின பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் வெகுதூரம் பயணிப்பதைத் தவிர்த்து இம்மருத்துவமனையிலேயே பயனடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் வசதிக்காக மருத்துவம் மற்றும் குடும்ப நல நிதியின்கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் புதிதாக அறுவை சிகிச்சை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பிரிவுகள், கழிவறைகள், செவிலியர் அறை, இருப்பு அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சை முன் மற்றும் பின் கவனிப்பு அறைகள் உட்பட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்வுள்ளது.
இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உள்ளார்கள்.



