புதுக்கடை, மார். 25 –
புதுக்கடை அருகே அம்சி நடுதனவிளை பகுதியில் அமைந்துள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று மாலை அம்மன் உட்பட சாமி விக்கிரகங்கள் கோவிலில் இருந்து தேங்காப்பட்டணம் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேள தாளங்கள் முழங்க பெண்கள் முத்துக்குடை, முளைப்பாரி எடுத்து வர பத்ரேஸ்வரி அம்மன உள்ளிட்ட சாமி விக்ரகங்களை கையில் சுமந்து குதிரை பூக்காவடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.
ஊர்வலம் அம்சி சந்திப்பு பகுதியில் வந்தபோது போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி மேளதாள சத்தம் இல்லாமல் செல்ல வற்புறுத்தி உள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் சாமி விக்ரகங்களுடன் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேங்காய்பட்டணம் – குழித்துறை நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான அரசு பேருந்துகள் பள்ளி கல்லூரி வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் போலீசார் ஊர்வலத்தை வழக்கம்போல் செல்ல அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து பக்தர்கள் அம்மன் விக்ரகங்களை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தேங்காபட்டணம் கடற்கரைக்கு கொண்டு சென்று நீராடி பூஜைகள் நடத்தி மீண்டும் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த போராட்டம் மற்றும் ஆற்காடு ஊர்வலத்தில் பாஜக குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் டி சுரேஷ், பொதுச் செயலாளர் சந்திரகுமார், நிர்வாகிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



