ஈரோடு, ஜூலை 13 –
ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய பாலாஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளது.
அந்தக் கோரிக்கை மனுவில், தமிழகத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் விசைத்தறி தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் வகையில், 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேஷ்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியிட்டு, முதற்கட்டமாக ரூ.300 கோடியை விடுக்க வழிவகை செய்த தமிழக அரசுக்கும், கைத்தறி துறை அமைச்சருக்கும் நெசவாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட வேஷ்டி, சேலைகளை இந்த ஆண்டு துவக்க இருப்பாக எடுத்துக் கொள்ளாமல், எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்திருப்பது நெசவாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றாலும், இதுவரை நடைமுறையில் இருந்த அளவான 1.77 லட்சம் வேஷ்டி, சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலச் சூழல் குறைவாக உள்ள நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வேஷ்டி, சேலை வழங்கிட வழிவகை செய்து, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து ஆறு மாத கால வேலைவாய்ப்பு கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இதுவரை பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட வேஷ்டியின் அளவு 3.75 மீட்டராக இருந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்படும் வேஷ்டியின் அளவு 2 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மீட்டருக்கு ஒரு முறை குறி கட்ட வேண்டிய சூழல் ஏற்படுவதால் உற்பத்தி குறையும் என்பதால், இன்றைய செலவினங்களுக்குத் தகுந்தவாறு ஒரு வேஷ்டி உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.20 கூலியாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றும், அரசு வழங்கும் இந்தக் கூலி விசைத்தறி நெசவாளர்களுக்கு முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். கூலி குறைவாகப் பெறுபவர்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) வசதியை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனவே, வேஷ்டி உற்பத்திக்கான கூலி உயர்வு குறித்த அறிவிப்பும், வேஷ்டி-சேலை உற்பத்திக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கும் கூலியைக் குறைவாகப் பெறுபவர்கள் கைத்தறித்துறை நிர்வாகத்திற்குப் புகார் அளிக்கக் கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில், முழு உற்பத்தியும் முழு கூலியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு காத்துக் கொண்டிருக்கிறது.



