மார்த்தாண்டம், மே 8 –
பளுகல் அருகே கட்டியோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெபா ஷைன் (49). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஜிஜின் ஜாய் (19) சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 17 வயதுடைய 2வது மகன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அரசு கணினி பயிற்சி நிலையத்துக்கு மாணவர் சென்று வந்தார். அப்போது காணத்துக்கோணம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருந்து தினமும் பள்ளி மாணவர்களை ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.
சம்பவ தினம் அதே போல் மாணவரை ஆபாசமாக தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். இதை மாணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சஞ்சய் என்பவர் வந்து சிறுவன் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் மாணவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெற்றோர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர். இது குறித்து சிறுவனின் தந்தை ஜெபா ஷைன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


