தஞ்சாவூர், ஜூலை 17 –
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை அருகே பள்ளிக்கூடம் எதிரே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ப னை செய்தவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்ததோடு, பெட்டி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி கல்லூரிக்கு எதிரே உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. இருப்பினும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி எதிரே செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் கோட்ட கலால் அலுவலர் ஐயம் பெருமாள் தலைமையில் மதுவிலக்கு போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரஹி முனிஷா, போலீஸ் ஏட்டுகள் சரவணன், முருகேசன் உள்ளிட்டோர் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார் 10 கிலோ அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த பெட்டி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ரூபாய் 25,000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த நடவடிக்கை இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


