ஈரோடு, ஜூலை 11 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 ம் பட்டதாரிகளுக்கு ரூ.600 ம் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ் எஸ் எல் சிமற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600 ம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000 ம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அணுகியும் அல்லது இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்திருக்க வேண்டும்.
எஸ் சி எஸ் டி பிரிவினருக்கு 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது. விண்ணப்பதாரர் கலைஞர் உரிமைத்தொகை மற்றும் வேறு எந்தவொரு நிதியுதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


