நாகர்கோவில், ஏப். 23 –
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கேசவதிருப்பாபுரத்தில் அமைந்துள்ள களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடிகளை பெண்கள், ஆண் பெண்கள் (பொது) இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கின்றனர். இந்த வாக்கு வையத்தில் முதன்முறையாக வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களுக்கு பூச்செடிகள் வழங்கப்பட்டது.
இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முல்லை, பிச்சிப்பூ செடிகள் வைக்கப்பட்டு இருந்தன. முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு அங்கு இருந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் செடிகளை வழங்கினார். பூச்செடிகளை வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் குழுவாக நின்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்வி பாய்ண்டில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மேலும் குழந்தைகளை விட்டு வாக்களிக்க செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக குழந்தைகள் அழாமல் இருக்க அங்கு குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகள் ஆர்வமாக விளையாடினர்.



