நாகர்கோவில், ஜூன் 22 –
கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து சாலையோர பகுதிகளில் கொட்டி விட்டு செல்வது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் கேரளாவின் குப்பை கிடங்கு குமரி மாவட்டம் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டது.
இது குறித்து அப்போது புகார் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு பல்வேறு கழிவு வாகனங்களை பிடித்து அபராதம் விதித்ததுடன் போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து சமீப காலங்களாக மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவது குமரி மாவட்டத்தில் சிறிதளவு இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவ்வப்போது சில குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொண்டு கொட்டி விட்டு செல்லும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி மேம்பாலப் பகுதியில், விதிகளை மீறி நள்ளிரவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தேரி மேம்பாலத்தின் கீழ் மற்றும் அதன் ஓரங்களில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துப் பாட்டில்கள், அறுவைச் சிகிச்சைக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளன.
சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் தங்களின் கழிவுகளைச் முறையாகச் சுத்திகரிக்காமல், செலவைக் குறைப்பதற்காக நள்ளிரவு நேரங்களில் லாரிகள் மூலம் இங்கு வந்து கொட்டிவிட்டுச் செல்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், அருகில் விவசாய நிலங்கள் இருப்பதாலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் இந்தக் கழிவுகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலந்து ஒட்டுமொத்தப் பகுதியையும் நச்சுமாக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



