நாகர்கோவில், ஆக. 4 –
கன்னியாகுமரி மாவட்ட உயர்கல்வித்துறையின் சார்பில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக 6 வகுப்பறைகள், மற்றும் தொழில் திறன்மைய 4.0 பணிமனை போன்றவை கட்டி முடிக்கப்பட்டது. இவற்றை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். அமைச்சர் ராஜேஷ்குமார் குத்துவிளக்கேற்றி, நன்றி தெரிவித்து பேசுகையில்: கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், நவீன வசதிகளுடன் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.2.70 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் 6 வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்கள்.
கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.6.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில் திறன்மிகு மையம் 4.0 பணிமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் நேரடியாகத் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப நவீன கருவிகளைக் கொண்டு பயிற்சி பெற முடியும். இத்தகைய மேம்பட்ட பயிற்சிகள் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரித்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் உயர் ஊதியத்தில் பணிபுரியும் வாய்ப்புகள் பெருகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுசீலா, அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் சேவியர், துணை முதல்வர் ஜெரால்டு அகிலா, பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



