நாகர்கோவில், மே 6 –
நாகர்கோவில் தேரேகால் புதூர் பகுதியை சேர்ந்த பகுதியில் பி எஸ் பி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு பச்சிளம் குழந்தை பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வீட்டில் வசிக்கும் சுமார் 23 வயது உடைய இளம் பெண்ணிடம் விசாரணை நடந்தது.
அந்தப் பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாகவும் பணிபுரிந்து வருகிறார். போலீஸ் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரிடம் போலீஸ் நிலையத்தில் நடத்திய விசாரணையில் குழந்தை தனக்கு பிறந்தது தான் என்றும், தனது அக்கா கணவர் மதன்குமார் (43) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் தான் கர்ப்பம் தரித்ததாக கூறினார்.
மேலும் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து குழந்தை பிறந்ததும் வெளியே முற்றத்தில் வீசியதாக கூறினார். இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையை கொலை செய்த இளம் பெண் மீதும் அதற்கு காரணமாக இருந்து அவரது காதலன் மதன்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த இளம் பெண் பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் நல குறைபாடு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


