நாகர்கோவில், செப். 01 –
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுசீலா பாய் தலைமை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வழங்கப்பட வேண்டும். இதை இலக்காக கொண்டுதான் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உழைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள் பங்களிப்பும் அவசியம் ஆகும். மாணவர்கள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கி இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்தில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார்.
2020-2023 ம் கல்வியாண்டில் பயின்ற வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவில் 36 மாணவர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்கள், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 32 மாணவ, மாணவிகள், பொருளியல் பாடப்பிரிவில் 35 பேர், ஆங்கிலம் பாடப்பிரிவில் 41 பேர், வரலாறு பாடப்பிரிவில் 29 பேர், கணிதவியல் பாடப் பிரிவில் 29 பேர், இயற்பியலில் 40 பேர், புள்ளியியல் பாடப்பிரிவில் 25 மாணவ, மாணவிகள் என மொத்தம் 314 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பொருளியல் துறையை சேர்ந்த மாணவிகள் ஷபீகா, சங்கரி ஆகியோர் பொருளியல் முதன்மை பாடப்பிரிவில் பல்கலைக்கழக தேர்வின் தர வரிசை பட்டியலில் முறையே 4 மற்றும் 15-வது இடத்தை பிடித்தனர். புள்ளியியல் துறையை சேர்ந்த மாணவிகள் அகாலின் ஜோதி, ஆஷிகா டார்வின், அனுஷியா ஆகிய மாணவி கள் புள்ளியியல் முதன்மை பாடத்தில் பல்கலைக்கழக தேர்வின் தர வரிசை பட்டியலில் முறையே 1, 2, 3 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர். இயற்பியல் துறையை சேர்ந்த மாணவி வசந்தி, பல்கலைக்கழக அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். வரலாற்று துறையை சேர்ந்த சுபாஷினி ராய் என்ற மாணவி பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் 9-வது இடம் பிடித்தார். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியினை கல்லூரி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் கூவினு, உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஷாகுல் ஹமீது, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜோதிரவீந்திரன், விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அல்டஸ் ஜே. கக்ஸ்லி, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெயசிங் ஜெபக்கனி, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பென்னட் ராஜேஷ் மற்றும் பத்மஸ்ரீ, ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் டோனிஷ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.



