சென்னை, ஜூன் 29 –
சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை கே.வி. ஜி அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241-சி ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர் ) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நவீன மேமோகிராம் சாதனம் பொருத்தப்பட்ட இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை, தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர், “மாநில புற்றுநோய் பதிவேட்டின் தரவுகள், பெண்களிடையே மார்பகப் புற்றுநோயே முதன்மையான பாதிப்பாக இருப்பதைக் காட்டுகின்றன. புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், பரிசோதனை வசதிகளை எளிதில் அணுக இயலாததாலும், விழிப்புணர்வின்மையாலும் பல பெண்கள் பரிசோதனையைத் தள்ளிப்போடுகின்றனர். இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் மூலம், பரிசோதனை வசதியை அவர்களின் வாழ்விடங்களுக்கே கொண்டு சென்று, பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று நலம் பெற உதவுகிறோம்” என்றார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இந்தத் திட்டம், அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் காவேரி மருத்துவமனைக்கு உள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் என்பது வெறும் பரிசோதனை சேவை மட்டுமல்ல, இது பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் ஆரோக்கியத்தை அவர்களே கவனித்துக் கொள்ள வழிவகுக்கும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.



