மதுரை, செப்.08.
மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். ஆரப்பாளையத்தில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, குரு தியேட்டர் போக்குவரத்து சிக்னல் வரை சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியை போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் சுரேஷ் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பத்ரி நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய டாக்டர் பத்ரி நாராயணன், “கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கருவிழி பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பாதி பேருக்கு மட்டுமே மாற்றுக் கருவிழி கிடைக்கிறது” என்றார்.
மேலும், கருவிழியின் முன்பகுதி மற்றும் பின்பகுதி என இரு பகுதிகளாகப் பிரித்து மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்றும், ஒரு நபர் கண்தானம் செய்வதன் மூலம் இரண்டு கருவிழிகளைப் பெற்று, அவற்றை தேவைக்கேற்ப பிரிப்பதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கரிமேடு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தானகுமார், எஸ்.எஸ். காலனி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆண்டவர், கரிமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதிராஜா, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் பவானி, பேரணி ஒருங்கிணைப்பாளர் திருவேட்டை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.



