தஞ்சாவூர், ஜூலை 24 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட் உத்தரவின்பேரில் தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இங்கே பெருவுடையார், பெரிய நாயகி, வராகி, முருகர், விநாயகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 8 திசைகளில் ஆகம விதிகளின்படி இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்ட திக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன.
இதில் இந்திரன், எமன், நிருதி குபேரன் ஆகிய நான்கு சன்னதிகள் சிலை இன்றி பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சன்னதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன. இதனால் பக்தர்கள் வழிபட முடியவில்லை.
எனவே பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி தர வேண்டும் என தஞ்சாவூரை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல் துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து கோவிலில் ஆய்வு செய்து வருகிற 28ந்தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை கமிஷனர் ஞானசேகர், உதவி கமிஷனர் கார்த்திகேயன் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பேன்ஸ்லே ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து பரம்பரை அறங்காவலா பாபாஜி ராஜா போன்ஸ்லே கூறுகையில்: அஷ்டதிக் பாலகர்களின் 4 சிலைகள் உள்ளன. 4 சிலைகள் இல்லை. மாயமான சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்வது குறித்து கோர்ட் உத்தவின் போரில் ஆய்வு செய்துள்ளோம். சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தே மாயமானது. கோர்ட்டு உத்தரவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றார்.



