சென்னை, மே-03,
சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேம்பால பணிக்காக தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை ரோஷன் பேக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சண்முகா ஆயில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும் சாலையை திறந்து விடவில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் வியாபாரம் முற்றிலுமாக பாதித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இப்பகுதி வணிகர்கள் நஷ்டமடைவதுடன் , பெரும் கடனாளிகளாக அவதிக்குள்ளாகிறார்கள். எங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய ரூ10 இலட்சம் வட்டியில்லா கடன் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இதை தவிர மெட்ரோ இரயில் திட்ட பணிக்காக தி.நகர் போக்கு வரத்து குளறுபடிகளால் வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதிக்கு வாடிக்கையாளர் வந்து போவதற்கு சிரமபடுகிறார்கள். தற்போது பணிகள் முடிந்த தெற்கு உஸ்மான் சாலையை பஸ் நிலையத்திலிருந்து இடதுபுறம் ஆட்டோக்கள் செல்லும் அளவிற்கு திறந்துவிட ஏற்பாடு செய்தாலே சிறிதளவேனும் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். இதை செய்வதற்கு கூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செவிசாய் ப்பதில்லை . உடனடியாக சாலையை திறந்து விட கோரிக்கை வைக்கிறோம். சாலையை திறந்து விடாத பட்சத்தில் 500 வணிகர்கள் இணைந்து மாபெரும் போரட்டத்தை நடத்துவோம் என்று அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது நிசார் அகமது, ஜவஹர் மற்றும் பலர் உடனிருந்தனர்.



