தென்தாமரைகுளம், பிப். 6 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (54). கூலித் தொழிலாளி. இவருக்கு நந்தகுமார் (30), பொன்குமரன் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு சொந்தமான 2 சென்ட் இடத்தை இளைய மகன் பொன்குமரனுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்குமரனின் மனைவி பிரிந்து சென்றதால் அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொன்குமரனுக்கு செலவிற்கு பணம் இல்லாமல் போனதாக தெரிகிறது. இதனால் அவர் தனக்கு கொடுத்த 2 சென்ட் இடத்தை ஒருவருக்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கண்ணதாசன், மகனை கண்டித்துள்ளார். இதனால் சம்பவத்தன்று இடம் தொடர்பாக தந்தை, மகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்குமரன் தந்தை என்றும் பாராமல் அவரை பிடித்து கீழே தள்ளிவுள்ளார். இதில் கண்ணதாசனுக்கு பின்தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூத்த மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் பொன்குமரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


