தூத்துக்குடி, செப். 24 –
தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து செலுத்தினர். பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்திலுள்ள அவருடைய திருவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர், திருச்செந்தூர் நகரமன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அந்தோணியார் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவ படத்திற்கு நாடார் மகிமை தலைவரும் தெட்சன மாற நாடார் சங்க நிர்வாக குழு உறுப்பினருமான கே.ஏ.பி. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயக்கொடி, தொழிலதிபர் பிபிஎம்டி பொன் குமரன், உப்பு உற்பத்தியாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன், எம்எஸ்ஆர். தாமஸ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் கோட்டூராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், மும்தாஜ், சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் பொன்ராஜ் மேயரின் உதவியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நிர்வாகி பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்



