திருவட்டார், ஜூன் 23 –
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூலை 2-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத்தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. வருஷாபிஷேகத்தையொட்டி ஜூன் 30-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், அஸ்திர கலச பூஜை வாஸ்து பலி, வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்ணியாஹம், அத்தாழ பூஜை ஆகியன நடக்கின்றன. இரண்டாம் நாள் (ஜூலை 1-ம் தேதி) காலை கணபதிஹோமம், சுகிர்த ஹோமம், பிம்ப சுத்தி கலச பூஜை, சதுர் சுத்தி தாரை, பஞ்ச கவ்வியம், பஞ்சகம், பிம்ப சுத்தி கலச அபிஷேகம், உச்ச பூஜை, உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மண்டப சுத்தி ஆகியனவும் மாலை பிரம்ம கலச பூஜை, அதிவாச ஹோமம், அத்தாழ பூஜை, அத்தாழ ஸ்ரீ பலி ஆகியன நடக்கின்றன. 3-ம் நாள் (ஜூலை 2-ம் தேதி புதன்கிழமை) காலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத் தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம், சிறப்பு ஸ்ரீபலி எழுந்தருளல் ஆகியன நடக்கின்றன. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை அத்தியற மடம் கோகுல் தந்திரி தலைமையேற்று நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கின்றன. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் “லட்சதீப விழா” நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர். வருஷாபிஷேக நாளில் கோவில் கருவறை மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபம், சபாமண்டப பகுதிகள் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில்
நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.