சிவகங்கை, செப். 01 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த சில மனுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி திருப்புவனம் ஆற்றில் மிதந்ததை எல்லா ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன . அப்போது சிவகங்கை செய்தித் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவலில் கூறியிருந்ததாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் திருப்புவனம் தாசில்தார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரியில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த பட்டா மாறுதல்கள் தொடர்பான 13 மனுக்களை யாரோ திருடி சென்றுள்ளனர் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள் நகல்களே என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகிறார்.
ஆனால் தாசில்தார் பராமரிக்கப்பட்டு வந்த மனுக்கள் என்று குறிப்பிடுகிறார். மேலும் 13 மனுக்களை யாரோ திருடிச் சென்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதில் மாவட்ட ஆட்சியர் சொன்னது உண்மையா? இல்லை தாசில்தார் சொன்னது உண்மையா? என்று பொதுமக்கள் இன்னும் முணு முணுத்த வண்ணமே இருக்கின்றனர். மேலும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தங்களின் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்றுவதில் வேலைப்பளு இருக்கிறது. நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் வேலை செய்கிறோம்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற துணைத் தாசில்தார் கிரேடில் புதிய பணியிடம் கூடுதலாக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். எனவே இதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஒருபுறம் இருக்க அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்த அரசு அலுவலர்களும் பணியில் அதிர்ப்தி நிலையில் வேலை செய்வதாக கூறப்படுகிறது . இது போன்ற விஷயங்களும் மனுக்களை ஆற்றில் வீசப்பட்டதிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் பேசிக் கொள்கின்றனர் .


