ராமநாதபுரம், ஜுன் 14 –
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் உறுதி செய்யும் நோக்குடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த முன்னோடி முயற்சி மூலம் கண்ணியமான வாழ்க்கை வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கை/திருநம்பி/இடைப்பாலினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சுய உதவிக் குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீடு திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் திருநங்கைகள்/திருநம்பி/இடை பாலினருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஒரே இடத்தில் வழங்கிட ஏதுவாக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திருநங்கைகள்/திருநம்பி/இடைபாலினருக்கு சிறப்பு முகாம் ஆனது ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜுன் 24 ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்டம் அரங்கில் நடைபெற உள்ளது. இம்முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கைகள்/திரு நம்பி/இடைபாலினர் அனைவரும் தங்களிடம் உள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆவணங்கள் பெற வேண்டியவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.