திருத்துறைப்பூண்டி, நவம்பர் 10 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புதிய பைபாஸ் சாலையில் விடியற்காலையில் அம்மாபட்டினத்திலிருந்து திருவாரூர் நோக்கி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த வயலில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தீப்பிடிக்க தொடங்கிய கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. காரை ஓட்டி வந்த டிரைவர் வெளியே வரமுடியாமல் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார்.
உடனடியாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை அனைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், உதவி ஆய்வாளர்கள் யுவராஜ், சுரேஷ்குமார், உளவுப்பிரிவு செந்தில் உள்ளிட்டோர்
விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் புதுக்கோட்டை அம்மாபட்டினத்தை பூர்விகமாக கொண்ட முகமது ரபீக் (25) என்பதும், இவருடைய தந்தை திருவாரூரில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், திருவாரூரில் வீடுகட்டி புலம்பெயர்ந்துள்ளதும் தெரியவந்தது.
இவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் உள்ள தனது மனைவியை பார்த்து விட்டு திருவாரூரில் உள்ள வீட்டிற்கு காரில் திரும்பிய போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.



