திங்கள்சந்தை, 20.08.2026
திங்கள்நகர்–குளச்சல் சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திங்கள்நகர் பிலாக்கோடு ஜங்ஷன் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி, பின்னர் அருகில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் சொகுசு காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் மின்கம்பிகள் அறுந்து விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனம் மற்றும் மின்கம்பத்தில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



