கடையநல்லூர், செப். 24 –
கடையநல்லூர் அருகே தாய்க்கு உணவு தராமல் வீட்டை பூட்டி சென்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமம் செந்தில் ஆண்டவர் தெருவில் வசித்து வந்தவர் கோர்ட்ரா தேவர். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகிய நிலையில் கோர்ட்ராத்தேவர் தனக்கும் தனது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் உணவு மற்றும் புகலிடம் தந்து பாதுகாக்க வேண்டும் என கூறி தனது இளைய மகன் சந்தன பாண்டி என்பவருக்கு தன்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீடுகளை ஏற்பாடு ஆவணமாக எழுதி பத்திரப்பதிவு செய்தார். இந்த ஏற்பாடு ஆவணம் தனது மனைவி சொர்ணத்திற்கு தெரியாமலே ரகசியமாக நடந்தேறியது.
இந்நிலையில் கடந்த வாரம் சொர்ணம் குடியிருக்கும் வீட்டை விட்டு சொர்ணத்தை வெளியேற்றியதுடன் கதவை பூட்டி போட்டு விட்டு அவருக்கு உணவு கொடுக்காமல் சந்தன பாண்டியன் அவரது மனைவியும் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டனர். இந்நிலையில் செய்வதறியாத சொர்ணம் தனது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து நிலைமையை எடுத்துக் கூறி அழுதுள்ளார். பின் இது குறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட முயன்றும் புகாரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நாங்கள் விசாரிக்க எந்தவித சட்டத்தில் இடமும் இல்லை எனக் கூறி புகாரை வாங்க மறுத்து விட்டனர்.
இதன் பின் சில காவல் அதிகாரிகள் சொர்ணத்தின் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்யுங்கள், அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறவே உறவினர்களின் உதவியோடு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை வாராந்திர மனுநீதி நாள் முகாமில் நேரடியாக தனது புகார் மனுவை கொடுத்து அழுது புலம்பினார். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் இது சம்பந்தமாக சந்தன பாண்டி மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சொக்கம்பட்டி காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மனு மீது இந்திய சட்ட பிரிவுகள் மூலம் அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் இந்த மனு சம்பந்தமாக காவல் அதிகாரிகள் சந்தன பாண்டியை கைபேசியில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் சொர்ணத்திற்கு உணவு வழங்குவது யார் அரசா இல்ல அவரது பெற்ற மகனா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பெற்ற தாய்க்கு மகனே உணவு கொடுக்காத விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



