கன்னியாகுமரி, செப்.11.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த மாநில அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசில் சின்னம் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் வழிகாட்டுதலின்படி, பிரபல தொழிலதிபரும் தவெக முக்கிய நிர்வாகியுமான பால்ராஜ் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.
வடசேரி சந்தை, பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் மாவட்ட செயலாளர் மாதவன், தொழிலதிபர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சக்தி குமரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் அணி இணை அமைப்பாளர்கள் தங்கராஜ், காமராஜ் கண்ணன், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அசோக் செல்லம், கவுன்சிலர் அக்சய கண்ணன், வார்டு செயலாளர்கள் ஆனந்த் செல்லம், சசிகரன், ஜெரின், ராஜேஷ்வரி, சிவா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கட்சியினருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிவித்த நிர்வாகிகள், இனிவரும் காலங்களில் மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.



