தருமபுரி, ஜூன் 23 –
தருமபுரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் பல்வேறு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் முன்னிலை வகித்தார்.
இதை தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுபானங்கள் சந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும். கல்வி நிலையங்களை ஒட்டி உள்ள கடைகளில் போதைப்பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். சட்ட விரோதமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் வைக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் கோபு, கபிலன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



