தஞ்சாவூர், ஜூலை 31 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் அவர்கள் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்களின் பெற்றோரை இழந்த மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த வகையில் குழந்தைகள் பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர 18 வயது வரை அவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் குழந்தைகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பிற்கிணங்க பெற்றோரை இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித் தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரின் ஒருவர் இறந்து மற்றொருவர் பெற்றோர் குழந்தையை கைவிட்டு சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரின் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருத்தல் வேண்டும்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரின் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரின் ஒருவர் இறந்து மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், தஞ்சை வ.உ.சி நகர் ஆகியோருடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.