தஞ்சாவூர், மே 1 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளும் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி வருகிற 4ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணி குறித்தும், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் தியாகராஜன், வேலுமணி (நிலஎடுப்பு), அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்புடைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



