பூதப்பாண்டி, ஜுலை 09 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி தாஸ் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் திடல் பகுதியில் செல்லும் தோவாளை சானல் கரையோரம் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடித்த காற்றில் நிலை தடுமாறி சைக்கிளுடன் தோவாளை சானலில் தவறி விழுந்துள்ளார். அதில் சைக்கிள் சானல் கரையோரமாகவும் இவர் தண்ணீரிலும் விழுந்துள்ளார். அந்த வழியாக வந்த மக்கள் இவருடைய சைக்கிள் கிடப்பதை பார்த்து இவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.
பின்னர் வீட்டிலும் சென்று பார்த்து அங்கேயும் இல்லாததால் பொதுமக்களின் உதவியுடன் சானல் முழுவதும் தேடியும் கிடைக்காததால் நேற்று காலை அவரது மனைவி ஆபரண பாய் இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தேடினார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள தெக்கு மேட்டுகுளத்தில் தேடினார்கள். அங்கு அந்தோணி தாஸ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.