சுசீந்திரம், ஜன. 7 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும் சூறைக்காற்றினால் தெங்கம்புதூர் அருகே பால்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம். நான்கு நாட்கள் ஆகியும் எந்த அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிடாததால் வயதான தம்பதியினர் சோகம். வீட்டில் மேற்கூரையில் விழுந்த மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் தென்னை வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் தெங்கம்புதூர் அருகே உள்ள பால்குளம் பகுதியில் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பழமையான மரங்கள் அப்பகுதியில் உள்ள பாக்கியராஜ் புஷ்பவல்லி என்ற வயதான தம்பதியரின் வீட்டின் மேற்கூரையில் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இதனால் வீட்டில் உள்ள மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பக்கத்து அறையில் வயதான தம்பதியர் தூங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்பு தம்பதியினர் கூறுகையில்: தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு சாப்பாடு என்றும் எங்களுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. நாங்கள் 50 வருடமாக இந்த கூரை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம். கூரையின் மேல் மரம் விழுந்து நான்கு நாட்கள் ஆகியும் எந்த அதிகாரியும் வந்து பாதிக்கப்பட்ட வீட்டினை பார்வையிடவில்லை. நாங்கள் பக்கத்து வீட்டில் தங்கி உணவருந்தி வருகிறோம் என குற்றம் சாட்டினர். மேலும் மேற்கூரையில் விழுந்த மரங்களை அகற்றி வீட்டின் மேற்கூரையை மாற்றி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த வயதான தம்பதியினர் கோரிக்கை விடுத்தனர்.



