பூதப்பாண்டி, ஜுலை 16 –
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கால்களை நனைத்து விட்டு வருவது ஒரு ஐதீகமாக கருதி அதன் படி நடந்து வந்தார்கள். மேலும் இந்த தெப்பகுளத்தில் தை மாதத்தில் வரும் தேர் திருவிழா காலத்தில் தெப்ப தேர் நிகழ்ச்சிகள் வெகு விமர்சனமாக நடந்து வந்தது. இந்த தெப்ப குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு வேண்டி தேவசம்போர்டும் பொதுப்பணித் துறையும் இணைந்து அனந்தநார் சானலிருந்து தண்ணீர் புலிவீரன் குளத்திற்கு வந்து தனி கால்வாய் வழியாக கோவில் தெப்பகுளத்தில் நீர் நிரப்பி வந்தார்கள். அந்த குளத்தில் நீர் வெளியேற இரண்டு மடைகளும் வைத்துள்ளார்கள். அதிக அளவு நீர் மழை காலங்களில் வந்தால் மேல்மடை வழியாக அரசியர் கால்வாயிலும் அடி மடை வழியாக தெப்பகுளத்தை தூர் செய்யும்போதும் அந்த கழிவு நீர் பழையாற்றிலும் செல்வது போல் அமைத்து இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர் திருவிழாவிற்கு முன்பு இந்த தெப்பகுளத்தை தூர் வாரி சுத்தம் செய்வதை பக்தர்களும் அற நிலைய துறையினரும் செய்து வந்தனர்.
தற்போது சுமார் 30 வருடங்களாக இந்த தெப்பகுளம் தூர் வாரப்படாமல் மகுளிகளும் குப்பைகளுமாக தெப்பகுளத்தினுடைய தனித்தன்மையை இழந்து காணப்படுகிறது. இது குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கேட்கும் போது குளத்திலிருந்து கழிவு நீர் வெளிவரும் அடி மடையானது முழுவதுமாக மூடி நீர் வெளியேற முடியாமல் உள்ளது. தெப்பகுளம் தூர் வாரபடாததற்கு இதுவே முழு காரணம். இதை அறநிலைய துறை அதிகாரிகளின் பார்வைக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பல நாட்களாக கழிகளின் பிடியில் சிக்கியுள்ள தெப்பகுளத்தில் ஏதோ விஷத்தன்மை உருவாகி இந்த குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றது. இதனால் கோவில் வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றமடிக்கிறது. இனியாவது அதிகாரிகள் முன் வந்து தெப்பகுளத்தின் அடி மடையை சரி செய்து தெப்பகுளத்தின் புனித தன்மையை காக்க வேண்டும் என வேதனையுடன் கூறினர். இந்நிலையில் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி ஊழியர்கள் கொண்டு முதல் கட்டமாக செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.