நாகர்கோவில், ஏப். 21 –
குமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 23ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை இன்று கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்: கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், முதல் தளத்தில் குளச்சல் மற்றும் பத்மநாபபுரம், இரண்டாவது தளத்தில் விளவங்கோடு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்படவுள்ளது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை அமைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வரிசை எண்கள் அமைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படுத்தி வைப்பதற்கான பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏதுவாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், சிசிடிவி செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைக்கும் வசதி, தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினருடன் மருத்துவ அறை, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார். உதவி தேர்தல் அலுவலர் பூங்கோதை, துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



