மார்த்தாண்டம், ஜுன் 7 –
கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (65). இவர் கடந்த 14 ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசாரும் பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவரை எங்கும் காணக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் பின்னால் அமைந்துள்ள மணக்குளம் பகுதிக்கு அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது, நேற்று குளத்தின் அருகில் ஒரு எலும்புக் கூடு ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அந்த எலும்புக் கூடை ஆய்வு செய்த போது அது 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான தேவராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த எலும்புக் கூடுகளை அட்டைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு பிரேத பரிசோதனைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தானாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.