குளச்சல், நவ. 12 –
குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் தற்போது பிளஸ் டூ படிக்கிறார். குடும்பத் தகராறு காரணமாக கொத்தனார் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகள் மகனை அவர் கவனித்து வந்தார். கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த அடிதடி பிரச்சனையில் கொத்தனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவானார்.
மாணவி 18 வயது நிரம்பிய வாலிபரை காதலித்து வந்தார். இதை அடுத்து ஒரு வார காலமாக அந்த வாலிபர் கொத்தனார் வீட்டுக்கு வந்து மாணவிக்கு அதாவது தனது காதலிக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். அப்போது கதவை பூட்டிக்கொண்டு இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது வந்துள்ளனர். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் கொத்தனாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் கொத்தனாருக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். அப்போது வாலிபரும் மகளும் வெளியே வந்தனர். இதை பார்த்த ஆத்திரத்தில் மகளை கண்டித்து தாக்கினார். அப்போது தந்தையுடன் மகள் கடுமையாக தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் மகளையும் வாலிபரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு சென்றார். போலீஸ் நிலையத்தில் செல்லும் வழியில் தந்தையிடம் தகராறு செய்த மகள் உன் மீது நான் போக்சோ வழக்கு கொடுக்கப் போவதான வும், நீ தான் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாய் என்று காவல் நிலையத்தில் கூறுவேன் என்றார். இதை கேட்டதும் கொத்தனார் உடைந்து போனார். காவல் நிலைய வரை சென்றவர் புகார் எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு காவல் நிலையத்திலிருந்து சென்று விட்டார்.
போலீசார் சிறுமியை தனியாக விட முடியாது என்பதால் அவருடைய தாயாரை தொடர்பு கொண்டனர். கால்நிலையத்திற்கு வந்த அவர் நான்தான் எனது மகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க அந்த வாலிபரிடம் கூறினேன் என்றும், அவர்கள் தவறாக பழகவில்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறி தனது மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இந்த விவகாரத்தில் காவல்துறை எதுவும் செய்ய முடியாமல், போலீசார் மாணவியுடன் தனிமையில் இருந்தவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


