மார்த்தாண்டம், ஜூன் 21 –
பேச்சிப்பாறையை அடுத்த குற்றியாறு வனப்பகுதியில் மாற்று திறனாளியான ராஜன் என்பவர் 18.06.2025 அன்று சக தொழிலாளர்களுடன் அப்பகுதியில் ரப்பர் பால் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை ஒன்று அங்கு வந்து அவரை காலால் மிதித்துள்ளது. இதில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராஜன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று அந்தப் பகுதி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து அரசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ரப்பர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோதையாறு கோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.