தஞ்சாவூர், ஜூலை 22 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார் வேளாண் துறை இயக்குநர் முரளிதரன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு வயல்களை பார்வையிட்டு அதன் பின்னர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத் தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரகலவை, விதை நெல் விநியோக மானியம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று, விதை உற்பத்திக்கான ஊக்கத் தொகை ஆகிய இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 80 சதவீத பதிவு பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் இயக்குநர்.
முன்னதாக தஞ்சாவூர் அருகே காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து இயக்குநர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் லட்சுமி காந்தன், துணை இயக்குநர் சாருமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



