நாகர்கோவில், மே 13 –
குமரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காலமாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவில் மக்கள் குவிந்து வருகிறார்கள். கன்னியாகுமரி, முட்டம், சொத்த விைளை, பாரியக்கல் பீச், உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வந்து கடலழகை ரசிப்பார்.
இந்த நிலையில் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதி சேர்ந்த முருகன் என்பவரும் தனது மகள் சுருதி (14) மற்றும் 9 வயது மகனுடனும், அவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) ஆகியோர் உட்பட 9 பேர் குறும்பனை அருகில் உள்ள பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று மாலையில் வந்திருந்தனர். பெரியவர்கள் கடற்கரையில் இருக்க, குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுருதி மற்றும் அஜித் ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்ததும் கரையில் இருந்த பெற்றோர், உறவினர்கள் கூச்சலிட்டனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். சிறிது நேரத்தில் சுஜித்தை அலை கரையில் கொண்டு வந்து வீசி உள்ளது. அதனால் சுருதி கடலில் மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் குளச்சல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் சுருதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இன்று மீண்டும் 2வது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுருதி 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர்கள் கடற்கரையில் கண்ணீருடன் அமர்ந்திருந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


