நாகர்கோவில், ஏப். 13 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ நேற்று நாகர்கோவில் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கூட்டணி அதிமுக கட்சியினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர் எம்.ஆர்.காந்தி: கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் நடந்துள்ளதாக கூறினார். வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டுமான பணிகள் கட்டியிருக்கிறேன் என பேசினார். மேலும் இந்த தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தர மீண்டும் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை தாருங்கள்.
வருகிற 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் பிரச்சாரத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மோடியின் பிரச்சாரம் நாகர்கோவில் தொகுதியில் பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்யும் என பேசினார்.
முன்னதாக நான் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தேவ் தலைமை தாங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் எம் ஆர் காந்தியை வெற்றி பெறச் செய்தது போன்று தற்போதைய தேர்தலிலும் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



