நாகர்கோவில், ஜனவரி 31 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களை தடுக்கவும் விபத்தில்லா மாவட்டமாக மாற்றவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாலை விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மற்றும் கனிம வளங்களை கடத்து வாகனங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற சோதனையின் போது முறையான பதிவு எண்கள் இன்றி இயங்கிய 18 கனரக லாரிகளை போலீசார் கண்டறிந்தனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கவும் கனிமவள கொள்ளை தடுக்கவும் இத்தகைய சோதனைகள் வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும் எனவும், நம்பர் பிளேட் இல்லாமலோ அல்லது தவறான பதிவு எண்களுடன் இயங்கும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும், சட்ட விரோத செயல்பாடுகள் குறித்த தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


