நாகர்கோவில், மே 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நிமிர் குழுவுடன் இணைந்து சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒட்டப்படவுள்ளதாகவும், மாணவர்கள் தங்களது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து உட்கோட்ட நிமிர் குழுவை சேர்ந்த பெண் போலீசார் கலந்து கொண்டனர்.



